தமிழ்நாட்டை காக்கும் சக்தியாக பா.ம.க. மட்டுமே உள்ளது - வாலாஜா பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ்


தமிழ்நாட்டை காக்கும் சக்தியாக பா.ம.க. மட்டுமே உள்ளது - வாலாஜா பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 20 Aug 2018 11:52 PM GMT (Updated: 20 Aug 2018 11:52 PM GMT)

தமிழ்நாட்டை காக்கும் சக்தியாக பா.ம.க.மட்டுமே உள்ளது என வாலாஜாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை தொகுதி மற்றும் வேலூர் வடக்கு மாவட்ட பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் வாலாஜா நகர சிறப்பு செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் ரஜினி சக்கரவர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணியில் சிறப்பாக செயல்பட்ட பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது :-

இங்கு நடப்பது வித்தியாசமான பொதுக்கூட்டம். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். பெண்களிடம் படைக்கும் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி என 3 சக்திகள் உள்ளன. தி.மு.க, அ.தி.மு.க.வை அழிக்கும் சக்தி உங்களிடம் தான் உள்ளது. அழிப்பதற்கு உங்களுக்கு எந்த ஆயுதமும் தேவை இல்லை. அனைவரிடமும் ஒரே ஒரு ஓட்டு என்கிற ஆயுதம் உள்ளது அது மட்டுமே போதுமானது.

2 திராவிட கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இப்போது இல்லை. இதனால் தமிழகத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை காக்கும் சக்தியாக பா.ம.க.மட்டும்தான் உள்ளது. மதுக்கடைகளை அகற்றுவோம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக பா.ம.க.விற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும்.

அன்புமணி போடும் முதல் கையெழுத்து மதுக்கடைகளை ஒழிப்பதற்கு தான். அதற்காக பெண்கள் வாக்களிக்க வேண்டும். ரூ.200, ரூ.500 வாங்கி கொண்டு வாக்களிக்காதீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, உயர்ந்த படிப்பு, விவசாயத்திற்கு பாதுகாப்பு, சிறந்த மருத்துவம் கிடைக்க பா.ம.க.விற்கு வாக்களியுங்கள். விவசாயத்தை, விவசாயியை பற்றி யாரும் பேசவில்லை. தாய், தந்தைக்கு அடுத்த தெய்வம் விவசாயிதான் என பாராளுமன்றத்தில் அன்புமணி பேசினார்.

பால் போன்ற தண்ணீர் ஓடியதால் தான் இந்த ஆற்றிற்கு பாலாறு என பெயர் வந்தது. இதில் தோல் தொழிற்சாலை கழிவுநீரை விட்டு கெடுத்து விட்டனர். எனவே பாலாற்றை பாதுகாக்க 1996-ம் ஆண்டு வாணியம்பாடிக்கும் வாலாஜாவுக்கும் இடையே 120 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் சென்று பிரசாரம் நடத்தினேன். இன்று வேலூர் மாவட்டம் கருப்பு மாவட்டமாகி உள்ளது. இந்த மாவட்டத்திற்காக பா.ம.க. நிறைய பாடுபட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 2 தொகுதிகளில் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது சாதனை. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை மந்திரிகள் ஆர்.வேலு, என்.டி.சண்முகம், மாநில துணை பொதுச்செயலாளர்கள் க.சரவணன், கே.எல்.இளவழகன். முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் எம்.கே.முரளி, மாவட்ட செயலாளர் கரிகாலன், மாவட்ட தலைவர் ஆறுமுகம் ஆகியோர் உள்பட பலர் பேசினர்.

கூட்டத்தில் பா.ம.க.வின் மாநில சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளர் வக்கீல் ஜெ.ஜானகிராமன், மாவட்ட துணை செயலாளர் கிரிகுமரன், மாவட்ட துணை தலைவர் எஸ்.எல்.எஸ்.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாரதி, பா.ம.க. தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் பாரத் நன்றி கூறினார்.


Next Story