அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 1 Sep 2018 10:45 PM GMT (Updated: 1 Sep 2018 7:08 PM GMT)

அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான விஜயலட்சுமி நேற்று வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், அரியலூர், ஜெயங்கொண்டம் வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து கலெக்டர் விஜயலட்சுமி பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 2 சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக வாக்குச்சாவடி உருவாக்கம்-4, வாக்குச்சாவடி அமைவிடம் மற்றும் கட்டிடம் மாற்றம்-31, வாக்குச்சாவடி பெயர் மாற்றம்-26 மற்றும் வாக்குச்சாவடிகளில் உள்ள பிரிவுகளை மறுசீரமைப்பு செய்தல்-16 என வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளும் இறுதி செய்யப்பட்டு, தற்போது வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் பணிகள் நேற்று முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. மேலும் 1.1.2019-ஐ தகுதிநாளாக கொண்டு 18 வயது நிரம்பிய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

வருகிற 8, 22-ந்தேதி அடுத்த மாதம் 6, 13-ந்தேதி ஆகிய 4 தினங்களில் வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவை அந்தந்த கிராம சபைகளில் படித்து பெயர்களை சரிபார்க்கும் பணியும், வருகிற 9, 23-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 7, 14-ந்தேதி ஆகிய 4 தினங்களில் அந்தந்தபகுதியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் வாக்காளர் சிறப்பு முகாமும் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும். எனவே, 18 வயது நிரம்பிய (31.12.2000 அன்றோ அல்லது அதற்குமுன் பிறந்தவர்கள்) தகுதியான நபர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில் வருவாய் கோட்டாட்சியர்கள் சத்தியநாரயணன், ஜோதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, தாசில்தார்கள் சந்திரசேகரன் (தேர்தல் பிரிவு), முத்துலட்சுமி, குமரய்யா, கோவிந்தராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story