கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 7 Sep 2018 9:00 PM GMT (Updated: 7 Sep 2018 12:48 PM GMT)

கோவில்பட்டி அருகே திருமணமான சில மாதங்களிலேயே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே திருமணமான சில மாதங்களிலேயே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா விசாரணை நடத்தி வருகிறார்.

ஆசிரியர் பயிற்சி...

கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகரைச் சேர்ந்தவர் ராமர். இவருடைய மனைவி வடிவு. இவர்களுடைய மகள் முத்துலட்சுமி (வயது 23). இவர் ஆசிரியர் பயிற்சி படித்து உள்ளார். இவருக்கும், தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மாரிமுத்துவுக்கும் (26) கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பின்னர் கணவன்–மனைவி 2 பேரும் தர்மபுரியில் வசித்து வந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முத்துலட்சுமி தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, கோவில்பட்டியில் உள்ள பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார்.

தற்கொலை

நேற்று முன்தினம் இரவில் முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த முத்துலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்ததால், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story