சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சிறப்பு விருது பசுமை கட்டிட ஆணையம் வழங்கியது


சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சிறப்பு விருது பசுமை கட்டிட ஆணையம் வழங்கியது
x
தினத்தந்தி 15 Sep 2018 11:30 PM GMT (Updated: 15 Sep 2018 8:39 PM GMT)

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு பசுமை ரெயில் நிலைய விருதை நேற்று பசுமை கட்டிட ஆணையம் வழங்கியது.

சென்னை, 

இந்தியா முழுவதும் தூய்மையே சேவை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய ரெயில்வே சார்பில் நேற்று முதல் அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை தூய்மையே சேவை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தது. இதன் முதற்கட்டமாக தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தூய்மையே சேவை திட்ட முகாம் தொடங்கப்பட்டது. இந்த திட்ட முகாமை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா தொடங்கி வைத்தார்.

இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள், தன்னார்வ தொண்டர்கள், சாரணர் இயக்க மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் நாட்டை சுத்தமாக வைப்போம் என உறுதிமொழி அளித்தனர். பின்னர் ரெயில் பயணிகளுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரெயில் நிலைய வளாகத்தில் பேரணியை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் ரெயில் நிலைய வளாகத்தில் கையெழுத்து பிரசாரத்தையும் அவர் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். சென்டிரல் ரெயில் நிலையத்தில் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

பசுமை ரெயில் நிலையம்

இதை தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள் சென்டிரல் ரெயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மரம் நடும் பணியிலும், சுவர்களை சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு இந்திய பசுமை கட்டிட ஆணையம் சார்பில் பசுமை ரெயில் நிலையம் என்ற அங்கிகாரம் அளிக்கப்பட்டது. இதற்கான கேடயத்தை இந்திய பசுமை கட்டிட ஆணையத்தின் தலைவர் சி.என்.ராகவேந்திரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி, ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story