மாங்காடு அருகே வாய்த்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை 3 பேர் கைது


மாங்காடு அருகே வாய்த்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2018 10:30 PM GMT (Updated: 1 Oct 2018 5:48 PM GMT)

மாங்காடு அருகே, வாய்த்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ்(வயது 24). வெல்டரான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான ஸ்டீபன் உள்ளிட்டோருடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரசன்னா(21) என்பவர், ‘இங்கு விஜய் என்பது யார்?” என்று கேட்டார். அதற்கு ஆனந்தராஜ் தரப்பினர், “நீ யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? இந்த நேரத்தில் உனக்கு இங்கு என்ன வேலை?” என்று பதிலுக்கு கேட்டனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், பிரசன்னாவை சரமாரியாக தாக்கினார்.

இதையடுத்து அங்கிருந்து சென்றுவிட்ட பிரசன்னா, தனது நண்பர்களுக்கு போன் செய்து சம்பவ இடத்துக்கு வரவழைத்தார். அதன்படி அங்கு வந்த பிரசன்னாவின் நண்பர்களான கணேஷ்(23), விஜய்(22) ஆகியோர் ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பர்களை பதிலுக்கு சரமாரியாக தாக்கினர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

அப்போது பிரசன்னாவின் நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பர் ஸ்டீபன் ஆகியோரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஆனந்தராஜ், ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஸ்டீபன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இதனால் அதர்ச்சி அடைந்த ஆனந்தராஜின் மற்ற நண்பர்கள் அங்கிருந்து பயந்து ஓடிவிட்டனர். பிரசன்னாவும் தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து விட்டு மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார், காயம் அடைந்த ஸ்டீபனை மீட்டு போருரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த ஆனந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பந்தமாக மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரசன்னா மற்றும் அவரது நண்பர்களான கணேஷ், விஜய் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story