முழு சுகாதாரத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்


முழு சுகாதாரத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 3 Oct 2018 11:00 PM GMT (Updated: 3 Oct 2018 6:42 PM GMT)

முழு சுகாதாரத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என திருவாரூரில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

திருவாரூர்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அரசின் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் குறித்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முழு சுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அதன்படி நேற்று திருவாரூருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்தார். கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு காரில் புறப்பட்டு திருவாரூர் கல்பாலத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்தார். அவருக்கு அமைச்சர் காமராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அங்கு அரசின் அனைத்து துறை அதிகாரிகளுடன், அரசு திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருவாரூர் பஸ் நிலையத்திற்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டார்.

பஸ் நிலையத்தில் இருந்த குப்பைகளை துடைப்பம் கொண்டு அகற்றினார். பின்னர் பஸ் நிலையத்தில் இருந்து பனகல் சாலை வரை நடந்து கடை, கடையாக சென்று குப்பை தொட்டிகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வீதி நகராட்சி அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்டு இருந்த மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இணைந்து செயல்பட வேண்டும்

வீட்டை சுத்தமாக, தூய்மையாக வைத்துக்கொள்ள பெற்றோர்களுக்கு மாணவ, மாணவிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். நமது வீடு மட்டுமின்றி, பக்கத்து வீடுகளும் துய்மையாக வைத்து கொள்ள உதவ வேண்டும். இதனால் தெரு தூய்மையாகி, நமது ஊரும் சுகாதாரமாக மாறும்.

இதன் மூலம் நமது நாடு தூய்மையான, சுகாதாரமான நாடாகும். முழு சுகாதாரத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உறுதிமொழி வாசித்தார். அமைச்சர் காமராஜிடம் உறுதிமொழியை தமிழில் வாசிக்குமாறு கூறினார். அதனை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் உறுதிமொழியை தமிழில் வாசித்தார். இதனை மாணவ-மாணவிகள் ஏற்றனர். பின்னர் நகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு குப்பை தொட்டிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் காளிமுத்து, மண்டல பொறியாளர் திருமாவளவன், நகராட்சி ஆணையர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலுக்கு சென்ற கவர்னர் அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார். இரவு திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

திருவாரூருக்கு கவர்னர் வருகையையொட்டி திருச்சி டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி தலைமையில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் மேற்பார்வையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story