கொடைக்கானல் மலைப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு


கொடைக்கானல் மலைப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 3 Oct 2018 9:45 PM GMT (Updated: 3 Oct 2018 6:55 PM GMT)

மாவோயிஸ்டுகள் ஆயுத போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பெரும்பாறை, 


கொடைக்கானல் அருகே உள்ள வடகவுஞ்சி-பெரும்பள்ளம் இடையே பொய்யாவழி என்ற வனப்பகுதி உள்ளது. இங்கு கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் சிலர் ஆயுதப்பயிற்சி மேற்கொள்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்து சுட்டனர். இதில் மாவோயிஸ்டு நவீன்பிரசாத் என்பவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

அவனுடன் தங்கியிருந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் தப்பி ஓடினர். அவர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் மாவோயிஸ்டு காளிதாஸ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள போலீசார் கைது செய்தனர்.
அவரை கொடைக்கானல் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது, விரைவில் மாவோயிஸ்டுகள் அனைவரும் ஒன்று கூடுவோம் என்றார். மேலும் தமிழகத்தில் 25 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாகவும் திடுக்கிடும் தகவலை கூறினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநில எம்.எல்.ஏ. உள்பட 2 பேரை மாவோயிஸ்டுகள் சுட்டு கொன்றனர்.

இதற்கிடையே தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில எல்லைகளில் விரைவில் ஆயுத போராட்டம் நடத்தப்படும் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளான தாண்டிக்குடி, பெரும்பாறை, வெள்ளரிக்கரை, பண்ணைக்காடு, மூலையார், வடகரைபாறை, கல்லக்கிணறு, குப்பமாள்பட்டி, பெரியூர், கடசிக்காடு, செம்பரான்குளம், உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகன், ஜெயசிங் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கல்லூரி மாணவர்கள் போல் மாறுவேடத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்துகின்றனர். அதுமட்டுமின்றி மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலுக்கு பயப்பட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

Next Story