பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதிலும் கவர்னர் தலையீடு; சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதிலும் கவர்னர் தலையீடு; சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Oct 2018 11:45 PM GMT (Updated: 5 Oct 2018 11:20 PM GMT)

பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிப்பதிலும் கவர்னர் தலையிடுவதாக தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் தி.மு.க. ஆதரவுடன் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி பல்வேறு நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தி மக்கள் நல அரசாக இருக்கிறது என்றால் மக்களோடு சேர்ந்து தி.மு.க.வும் வரவேற்கும். ஆனால் அதற்கு மாறாக திட்டங்கள் எதையும் செய்யாமல் மின்சாரத்துக்கு வரி, தண்ணீருக்கு கூடுதல் வரி, குப்பை வரி, கழிவுநீர் வரி என எண்ணற்ற வரி விதிப்புகளை திணித்து மக்கள் விரோத அரசாக இருப்பது ஆட்சிக்கு ஆதரவளிக்கும் தி.மு.க.வுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

ஆட்சிக்கு ஆதரவளித்தாலும் மக்களுக்கு எதிரான செயல்களை தி.மு.க. தொடர்ந்து சுட்டிக்காட்டியும், எதிர்த்தும் வருகிறது. புதுவை அரசு தனது நிர்வாக திறமையின்மையை, சாதுர்ய அறிவின்மையை ஒவ்வொரு நிகழ்வுகளிலும் வெளிக்காட்டி வருகிறது. புதுவையில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

அதன்படி கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. மழை பெய்வது மகிழ்ச்சியை அளித்தாலும் புதுவை நகரம், புறநகர் பகுதிகள் மழைக்கு தாங்குமா? என்ற அச்சமும் ஏற்படுகிறது. புதுவையை பொறுத்தவரை ஒரு மணிநேரம் மழை பெய்தாலே பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க முடியும்.

மழையினால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படும் சூழ்நிலையில் காலதாமதமாகவே விடுமுறை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. விடுமுறை அறிவிக்காததற்கு கவர்னரின் தலையீடும் காரணம் என்று தெரிகிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ஆட்சியாளர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் உரிமைகூட ஆட்சியாளர்களிடம் இல்லை என்றால் அது மக்களின் துரதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.

இதனால் புதுச்சேரி மக்கள் குமுறிப்போய் உள்ளனர். ஆகவே ஆட்சியாளர்கள் இனியாவது தங்களுக்கு உள்ள அதிகாரத்தை முழுமையாகவும், சுயமாகவும் பயன்படுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story