கெத்தையில் கடந்த 1989-ம் ஆண்டு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 54 பேரின் நினைவு தினம் இன்று அனுசரிப்பு


கெத்தையில் கடந்த 1989-ம் ஆண்டு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 54 பேரின் நினைவு தினம் இன்று அனுசரிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2018 11:30 PM GMT (Updated: 24 Oct 2018 7:22 PM GMT)

கடந்த 1989-ம் ஆண்டு கெத்தையில் நிலச்சரிவில் சிக்கி 54 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இச்சம்பவத்தின் 29-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்து வருகிறது. இக்காலக்கட்டத்தில் நீலகிரியில் இயற்கை பேரிடர் பாதிப்பு அதிகளவு ஏற்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையின்போது கேத்தி அச்சனங்கல் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உள்பட 44 பேர் மண்சரிவுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஊட்டி- குன்னூர், கோத்தகிரி கட்டபெட்டு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, அனைத்து சாலைகளும் துண்டித்தன. மேலும் 1 வாரம் போக்குவரத்து முழுமையாக இல்லை.

இதேபோல் மற்றொரு சம்பவம் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது. அந்த சோக சம்பவம் பற்றிய விவரம்:-

மஞ்சூர் தாலுகா கெத்தையில் குந்தா நீர்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்குவதற்காக அணையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் 80-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர் குடியிருப்புகள் இருந்தது. நீர்மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் குடியிருப்புகளில் வசித்து வந்தனர்.

கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி கெத்தையில் மாலை 6 மணிக்கு வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய தொடர்ந்து பலத்த மழையாக கொட்டியது. மழையின் காரணமாக மின்வாரிய ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் இரவு 9.15 மணியளவில் திடீரென அப்பகுதியில் நீரிடி(ஒரே இடத்தில் அதிக மழை பெய்வது) ஏற்பட்டது.

அதாவது வானத்தில் இருந்து ஒட்டு மொத்த மழையும் கெத்தை பகுதியில் பெய்தது. இதனால் அப்பகுதியில் திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் மலைகளில் இருந்து ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து மின்வாரிய குடியிருப்புகளை இடித்து தள்ளியது. கண்ணிமைக்கும் நேரத்தில் 40 குடியிருப்புகள் இடிந்து முற்றிலும் தரைமட்டமானது. இந்த கோர சம்பவத்தில் கெத்தை தபால் நிலைய அதிகாரி சந்திரன் உள்பட மொத்தம் 36 பேர் மண்ணுக்குள் புதைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

பலத்த மின்னலும், நீரிடியும் ஏற்பட்டபோது குடியிருப்பில் இருந்த ஒரு பெற்றோர் தனது 4 மாத குழந்தை சாபனா மற்றும் ஜாபர் அலியை(வயது 2) வீட்டில் இருந்து வெளியே தூக்கி வீசினர். இதனால் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். அந்த காலத்தில் மீட்பு பணிக்கு தேவையான பொக்லைன், கிரேன்கள் ஆகிய நவீன எந்திரங்கள் இல்லை. மேலும் போக்குவரத்து வசதியும் கிடையாது. தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருந்ததாலும் இரவு நேரம் என்பதாலும் மீட்பு பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு அன்றைய கலெக்டர் அம்பேத்கர் ராஜ்குமார், போலீஸ் சூப்பிரண்டு ஜாங்கிட், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உசேன் மற்றும் தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இரவோடு இரவாக சென்றனர். இருப்பினும் மீட்பு பணியை தொடங்க முடியாத அளவுக்கு மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அதிகாரிகள், பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் மறுநாள்(26-ந் தேதி) விடியற்காலையில் மழை குறைந்தது. அதன்பின்னர் பல்வேறு தளவாட பொருட்களின் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்த மற்றும் பாறைக்கு அடியில் நசுங்கி இறந்து கிடந்தவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

கெத்தை பகுதியில் நீரிடி சம்பவத்தில் காணாமல் போனவர்கள் இறந்ததாக கணக்கெடுக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் மொத்தம் 54 பேர் இறந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர். பின்னர் இறந்தவர்களுக்கு நினைவுத்தூண் கட்டப்பட்டது.

இந்த சோக சம்பவம் நடைபெற்று இன்று(வியாழக்கிழமை) 29-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் கெத்தையில் நீரிடி ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு மின்வாரிய ஊழியர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

நடப்பு ஆண்டில் நாளை (வெள்ளிக்கிழமை) வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்டம் முழுவதும் 233 இடங்கள் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் கொண்ட 35 மண்டல குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்ட காவல்துறை சார்பில் பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளனர்.

Related Tags :
Next Story