கரடிகுட்டையில் மதுக்கடையை திறக்க தடை விதிக்க வேண்டும் - பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


கரடிகுட்டையில் மதுக்கடையை திறக்க தடை விதிக்க வேண்டும் - பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 26 Oct 2018 10:45 PM GMT (Updated: 26 Oct 2018 9:32 PM GMT)

கரடிகுட்டையில் மதுக்கடையை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளருமான பி.முருகன் தலைமையில், கரடிகுட்டை பொதுமக்கள் கலெக்டர் டாக்டர் பிரபாகரை நேற்று சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சூளகிரி தாலுகா அயர்னப்பள்ளி ஊராட்சி கரடிகுட்டை கிராமம், சாந்தகிரி ஆசிரமம் அருகில் உள்ள நிலத்தை ஒருவர் வாங்கி உள்ளார். அந்த இடத்தில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அங்குள்ள சாந்தகிரி ஆசிரமத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து தியான பயிற்சி மேற்கொள்கின்றனர்.

அத்துடன் மாதந்தோறும் பவுர்ணமி நாளன்று அங்கு 500 முதல் ஆயிரம் பேர் வரை வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இந்த மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பாக ஏராளமான பெண்கள் இங்கு வந்து செல்லும் பகுதியில் மதுக்கடை திறந்தால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பெண்கள் பெரும் பயத்தில் உள்ளனர். எனவே, இந்த பகுதியில் மதுக்கடை திறப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story