சேலத்தில் கர்ப்பிணி பலியானது எப்படி? - சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்


சேலத்தில் கர்ப்பிணி பலியானது எப்படி? - சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்
x
தினத்தந்தி 30 Oct 2018 11:15 PM GMT (Updated: 30 Oct 2018 10:25 PM GMT)

சேலத்தில் கர்ப்பிணி பலியானது எப்படி? என்பது குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலத்தில் கர்ப்பிணி பலியானது எப்படி? என்பது குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மகுடஞ்சாவடியை சேர்ந்த சுகன்யா என்ற கர்ப்பிணி மர்ம காய்ச்சலால் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் நிமோனியா காய்ச்சலால் தான் இறந்து போனார். அவருக்கு 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. முதல் நாள் அங்குள்ள ஒரு தனியார் டாக்டரிடம் சிகிச்சை பெற்று உள்ளார். காய்ச்சல் குணம் அடையாததால் 2-வது நாள் தாரமங்கலத்தில் வேறு ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற்று உள்ளார். அங்கும் சரியாகவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் அதிகம் ஆகி உள்ளது.

அதன்பிறகு அவர் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று உள்ளார். அப்போது அவரை பரிசோதித்தபோது அவருக்கு நிமோனியா காய்ச்சல் தாக்கி இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். காய்ச்சல் பாதித்த அன்றே அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து இருந்தால் என்ன நோய் என்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்து இருக்கலாம்.

எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பல டாக்டர்களிடம் சிகிச்சை பெறுவதை தவிர்த்து, ஒரே டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். அதே போன்று டாக்டர் அறிவுரை இல்லாமல் மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். தற்போது 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதே போன்று 5 கிலோ மீட்டர் தொலைவில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது.

இங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்தால் அவர்களது ரத்த மாதிரி எடுத்து ஒரு நிமிடத்தில் என்ன காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளித்து நோயை குணப்படுத்த முடியும்.

தற்போது தினமும் ஒவ்வொரு வட்டாரத்திலும் 9 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நடமாடும் மருத்துவ குழுவினர் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று சிறப்பு முகாம் நடத்தி வருகின்றனர். பருவ நிலை மாற்றத்தால் கடந்த மாதம் தினமும் 50 முதல் 60 பேர் வரை காய்ச்சல் பாதிப்படைந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்து உள்ளனர். இந்த மாதம் அது அதிகரித்து தினமும் 100 முதல் 110 வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர்.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும். அப்போது அவர்களுக்கு உயர் சிகிச்சை அளித்து உயிர் இழப்பு தவிர்க்கப்படும். இதே போன்று தனியார் மருத்துவமனை டாக்டர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது தற்போது என்ன நடக்கிறது என்பதை தெரிந்து சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது காற்று மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவும். எனவே பொதுமக்கள் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் 2 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமாகி சென்று விட்டார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே போன்று மாவட்டம் முழுவதும் 4 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 13 பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டனர் என்று அவர் கூறினார்.


Next Story