மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை - தனியார் நிறுவன ஊழியர் கைது


மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை - தனியார் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2018 11:00 PM GMT (Updated: 9 Nov 2018 10:17 PM GMT)

வலங்கைமான் அருகே மதுபாட்டிலால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே செம்மங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் அயோத்திராமன். இவருடைய மகன் கோகுல் (வயது 21). இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

கோகுல், தீபாவளிக்கு தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் மகன் கணேசன்(35). இவர், கோகுலுக்கு சித்தப்பா உறவு முறை ஆவார். தீபாவளிக்கு முன்னதாக இரண்டு குடும்பத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உறவினர்களால் சமரசம் செய்து வைக்கப்பட்டது.

நேற்று காலை மீண்டும் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு முற்றியதால் கோகுல் மதுபாட்டிலால் கணேசனின் வயிற்று பகுதியில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கணேசன் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்து சிறிது தூரம் ஓடினார்.

பின்னர் உயிருக்கு போராடி மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கோகுல், வலங்கைமான் போலீசில் ஆஜர் ஆனார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story