தேவகோட்டை அருகே மின்கம்பத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி; உறவினர்கள் போராட்டம்


தேவகோட்டை அருகே மின்கம்பத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி; உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2018 10:35 PM GMT (Updated: 1 Dec 2018 10:35 PM GMT)

தேவகோட்டை அருகே மின்கம்பத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ளது செய்யாநேந்தல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 35). எலக்ட்ரீசன் வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். இந்தநிலையில் நேற்று நெட்டேந்தல் கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டில் மின்சாரம் இல்லாததால் பழுது பார்க்க சென்றார்.

பழுதை சரி செய்ய வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறினார். அப்போது எதிர்பாராத நிலையில் செல்லப்பாண்டியை மின்சாரம் தாக்கியது. அதில் மின்கம்பத்தில் தொங்கிய நிலையில் அவர் பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா போலீசார் உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் செல்லப்பாண்டியை சாவுக்கு, அவரை வேலைக்கு அழைத்து வந்தவர் தான் காரணம் என்று கூறி, இறந்தவரின் உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்தவரின் மனைவி, தனது கணவரை மின்கம்பத்தில் ஏற வைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்தார். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்த உறவினர்கள் உடலை வாங்கி சென்றனர்.


Next Story