போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மன்னார்குடியில் 2-வது நாளாக நடந்தது


போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மன்னார்குடியில் 2-வது நாளாக நடந்தது
x
தினத்தந்தி 13 Dec 2018 10:45 PM GMT (Updated: 13 Dec 2018 8:36 PM GMT)

மன்னார்குடியில் போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுந்தரக்கோட்டை,

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடந்த 5-ந் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்தும், வழக்கை திரும்ப பெறக்கோரியும் மன்னார்குடியில் நேற்று முன்தினம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை.அருள்ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் ரெத்தினக்குமார், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர் தணிக்கோடி, மாதர் சங்க செயலாளர் மீனாம்பிகை, நகர செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள், ஆட்டோ சங்க தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story