மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் அதிகாரிகளிடம், விவசாயிகள் வலியுறுத்தல்


மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் அதிகாரிகளிடம், விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2018 10:45 PM GMT (Updated: 17 Dec 2018 5:36 PM GMT)

மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம், விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த விளாங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பெண்கள் என 50–க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, வருவாய் நிர்வாக நீதிமன்ற துணை கலெக்டர் பாலசந்திரன், மாவட்ட வழங்கல் அதிகாரி அழகர்சாமி ஆகியோரை நேரில் சந்தித்து, மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

விளாங்குடி கிராமத்தில் விளை நிலத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும் ஆழ்குழாய் கிணறு மூலம் 200 ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறோம். மதுக்கடை உள்ள பகுதியில் தானியங்களை உலர வைக்கும் 4 களங்கள் உள்ளன. வெளியூரில் இருந்து தானியங்களை கொண்டு வந்து களத்தில் கொட்டி உலர வைத்து விட்டு செல்கின்றனர்.


நடவு, களை பறித்தல், தானியங்களை உலர வைத்தல் போன்ற பணிகளுக்காக களங்கள் அமைந்துள்ள பகுதிக்கு பெண்கள் தினமும் செல்கிறார்கள். இப்பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டதால் பணிக்கு வருவதற்கு பெண்கள் அச்சப்படுகின்றனர்.

சிலர் மதுபோதையில் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி மானபங்கப்படுத்தி உள்ளனர். காலி மதுபாட்டில்களை வயல்களில் உடைத்துவிட்டு செல்கின்றனர்.


பிளாஸ்டிக் கப், பாக்கெட்டுகளையும் வீசிவிட்டு செல்வதால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் 3 பேர், வயலில் நடவு பணியை முடித்துவிட்டு வந்த பெண்ணை மானபங்கப்படுத்தி, தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் பயந்துபோன அந்த பெண், அந்த வழியாக வந்த விவசாயியிடம் தனக்கு நடந்த கொடுமையை சொல்லி கதறி அழுதார்.

அந்த 3 பேரிடம் கேள்வி கேட்ட விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதேபோல கடந்த வாரம் வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறித்து சென்றுவிட்டனர். குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஒரத்தநாடு தாலுகா நெம்மேலி திப்பியக்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பெட்டகங்களை வழங்க வேண்டும். வீட்டு மனைகளில் சாய்ந்த தென்னை மரங்களை அதிகாரிகள் கணக்கீடு செய்யவில்லை. எனவே சாய்ந்த தென்னை மரங்களுக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

தஞ்சையை அடுத்த அம்மையகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், கஜா புயலால் பாதித்த பயிர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடனை திரும்ப செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். கஜா புயலால் பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில் வசூல் வேட்டையில் ஈடுபடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சங்கு ஊதி நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட செயலாளர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் இவர்கள், அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க தமிழகஅரசு அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Next Story