அ.தி.மு.க.வில் இருந்து ‘ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி நீக்கம், இணைப்பு எல்லாம் ஏமாற்று வேலை’ - தங்கதமிழ்செல்வன் சொல்கிறார்


அ.தி.மு.க.வில் இருந்து ‘ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி நீக்கம், இணைப்பு எல்லாம் ஏமாற்று வேலை’ - தங்கதமிழ்செல்வன் சொல்கிறார்
x
தினத்தந்தி 25 Dec 2018 10:00 PM GMT (Updated: 25 Dec 2018 4:58 PM GMT)

‘அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி நீக்கம், சேர்ப்பு எல்லாம் ஏமாற்று வேலை‘ என்று தங்கதமிழ்செல்வன் கூறினார். அ.ம.மு.க கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆண்டிப்பட்டி, 


ஒரு கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் என்பது கூட்டரங்கில் நடத்த வேண்டும். பொதுக்கூட்டம் என்றால் மட்டுமே திறந்தவெளியில் நடத்த வேண்டும் என்பது மரபு. ஆனால் ஆண்டிப்பட்டியில் செயல்வீரர்கள் கூட்டம் திறந்தவெளியில் பொதுக்கூட்டம் போல் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், மக்கள் கூட்டத்தை காட்டுவதற்காக ஊரக வேலை திட்ட பணியாளர்களை வேலை அட்டையை புதுப்பித்து தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து வந்து அமர வைக்கப்பட்டனர். அந்த கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர், டி.டி.வி. தினகரனை நம்பி சென்றவர்கள் யாரும் பிழைத்ததாக சரித்திரம் இல்லை என்றார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மனசாட்சியுடன் ஒன்றை மட்டும் கூற வேண்டும். டி.டி.வி.தினகரன் இல்லாவிட்டால், ஓ.பன்னீர்செல்வத்தால் முதல்-அமைச்சராக வந்திருக்க முடியாது. இது தேனி மாவட்ட மக்களுக்கும், குறிப்பாக பெரியகுளம் மக்களுக்கு நன்கு தெரியும். அவரை பதவியில் இருந்து இறக்கிய பின்னர் தான் குற்றச்சாட்டை கூறி வெளியேறினார்.

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். நான் இப்போது சவால் விடுகிறேன். ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். ஓ.பன்னீர்செல்வம் இதனை ஏற்றுக்கொண்டு மேடையில் பேச தயாரா?. ஒரு தலைவர் பதவிக்கு கட்சித் தலைமை அனுமதியின்றி யாரும் போட்டியிடக்கூடாது. மதுரையில் அ.தி.மு.க. சார்பில் இயக்குனர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களை ஓ.ராஜா பணம் கொடுத்து தோற்கடித்து விட்டார். இதுதொடர்பாக அமைச்சர்கள் செல்லூர்ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் கொடுத்தனர். ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் விலகிவிடுவோம் என்று கூறியதால், வேறுவழியின்றி ஓ.ராஜாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு வந்த 2 நாளில், அவர்களுக்குள் என்ன பேரம் நடைபெற்றது என்பது தெரியவில்லை. அவரை மீண்டும் கட்சியில் இணைத்து விட்டனர். இது ஏமாற்று வேலை. இவை அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர்.

தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் மரண அடி கொடுக்க தயாராகிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story