‘கஜா’ புயலுக்கு பின் பணிகள் துரிதம்: திருவாரூர்-காரைக்குடி இடையே அடுத்த மாதம் ரெயில் போக்குவரத்து


‘கஜா’ புயலுக்கு பின் பணிகள் துரிதம்: திருவாரூர்-காரைக்குடி இடையே அடுத்த மாதம் ரெயில் போக்குவரத்து
x
தினத்தந்தி 30 Dec 2018 10:45 PM GMT (Updated: 30 Dec 2018 7:06 PM GMT)

திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் ‘கஜா’ புயலுக்கு பின்துரிதமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே துணை பொறியாளர் ஜான்சன்விஜயக் குமார் கூறினார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையேயான ரெயில் பாதை இந்தியாவின் பழமையான ரெயில் பாதைகளுள் ஒன்றாகும். இந்த பாதை வழியாக சென்னை, ராமேஸ்வரத்துக்கு ரெயில் இயக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை வரையும் ரெயில் பாதை இருந்தது.

வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பு, பூ வகைகள் இந்த ரெயில் பாதை வழியாக இந்தியாவின் பல பகுதிகளுக்கும் எடுத்து செல்லப்பட்டன. திருவாரூர்-காரைக்குடி, திருத்துறைப்பூண்டி-கோடியக்கரை இடையே இருந்த மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கின.

பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு (2018) பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. இதில் பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையேயான பணிகள் முழுமையாக முடிவடைந்து, ரெயிலும் இயக்கப்பட்டு விட்டது. திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையேயான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி வீசிய ‘கஜா’ புயலால் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. புயல் காரணமாக திருத்துறைப்பூண்டி ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தன. ரெயில்வே கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சேதமடைந்தன.

ரெயில்வே பணிகளில் ஈடுபட்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த கூடாரமும் புயலால் சேதமடைந்தது. இதனால் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ரெயில்வே பணிகள் கடந்த 1 மாதமாக முடங்கின. இந்த நிலையில் தற்போது பணிகள் மீண்டும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்கும் முயற்சியில் கடந்த 1 வாரமாக தொழிலாளர்கள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி, ஆலத்தம்பாடி, திருநெல்லிக்காவல், மாவூர் உள்ளிட்ட இடங்களில் ரெயில் நிலையம் அமைக்கும் பணிகளின் வேகம் கூடி உள்ளது. இந்த பணிகளை ரெயில்வே துணை பொறியாளர் ஜான்சன்விஜயக்குமார், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருத்துறைப்பூண்டியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் பெருமளவு முடிவடைந்து விட்டது. மீதிஉள்ள பணிகளை விரைந்து முடித்து ஜனவரி மாத இறுதிக்குள் ரெயில் இயக்கப்படும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த பாதையில் ரெயில் இயங்க ஆரம்பித்தால் குறைந்த கட்டணத்தில் சென்னை செல்லலாம்.

இந்த பணிகள் முடிவடைந்த உடன் திருத்துறைப்பூண்டி- திருக்குவளை வழியாக வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் வரையிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் வழியாக அகஸ்தியன்பள்ளி வரையிலும் நடைபெறும் ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழித்தடத்தில் 50 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த இரு பாதைகளிலும் விரைவில் ரெயில் போக்குவரத்தை தொடங்க ரெயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story