குத்தாலம் ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை பயணிகள் அதிர்ச்சி


குத்தாலம் ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை பயணிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 30 Dec 2018 11:00 PM GMT (Updated: 30 Dec 2018 7:17 PM GMT)

மயிலாடுதுறை அருகே குத்தாலம் ரெயில் நிலையத்தில், ரெயில் முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குத்தாலம் ரெயில் நிலையத்தில் 1-வது நடைமேடையில் திருச்சி- மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயிலுக்காக பயணிகள் காத்திருந்தனர். ரெயில் நிலையத்துக்குள் மயிலாடுதுறை- திருச்சி பாசஞ்சர் ரெயில் வந்து கொண்டிருந்த போது பயணிகளோடு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதனால் ரெயில் என்ஜினில் சிக்கிய அவர் உடல் 2 துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார். தங்களோடு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தவர் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில்(வயது35) என்றும் இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

செந்தில் உடலை போலீசார் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பிரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில்நிலையத்தில் வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story