நோய் தொற்றை தவிர்க்க ரத்தம் கொடுப்பவரை போல் பெறுபவருக்கும் சோதனை நடத்த வேண்டும்; மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை


நோய் தொற்றை தவிர்க்க ரத்தம் கொடுப்பவரை போல் பெறுபவருக்கும் சோதனை நடத்த வேண்டும்; மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை
x
தினத்தந்தி 1 Jan 2019 11:45 PM GMT (Updated: 1 Jan 2019 7:16 PM GMT)

ரத்தம் தானம் செய்வதற்கு முன்பு ரத்தம் கொடுப்பவருக்கு பரிசோதனை நடத்துவதை போல ரத்தம் ஏற்றப்படுவதற்கு முன்பு ரத்தம் பெறும் நபருக்கும் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

விருதுநகர்,

சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் அப்பெண்ணுக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பிறக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாமல் இருக்க உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தற்போது உள்ள நடைமுறையில் ரத்ததான முகாமிலோ, அல்லது ரத்த சோமிப்பு வங்கியிலோ ரத்தம் தானம் செய்ய வருபவர்களுக்கு அவர் ரத்தம் கொடுப்பதற்கு முன்பு ரத்தம் மாதிரி எடுத்து எச்.ஐ.வி., மலேரியா உள்ளிட்ட சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், இந்த சோதனையில் அவருக்கு நோய் தொற்று இருக்கும் பட்சத்தில் அதனை பதிவு செய்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரத்தம் பெறும் நோயாளிகளுக்கு ரத்தம் ஏற்றப்படுவதற்கு முன்னர் இம்மாதிரியான சோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவில்லை. மேலும் ரத்தம் பெறுவோருக்கான விண்ணப்ப படிவத்திலும் அவர் ரத்தத்தை சோதனை செய்ததற்கான ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாக்கப்படவில்லை.

எனவே மருத்துவ நிபுணர்கள் ரத்தம் தானம் செய்யபவர்களுக்கு சோதனை நடத்துவது போல ரத்தம் பெறுவோருக்கும் அவர்களுக்கு ரத்தம் செலுத்துவதற்கு முன்னர் உரிய சோதனைகள் நடத்தப்படுவது கட்டாயம் ஆக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதன் மூலம் ரத்தம் ஏற்றுவதன் மூலம் நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொருத்தமட்டில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் ரத்ததானம் செய்கின்றனர். இந்தரத்தம் 12 லட்சம் பேருக்கு பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் அரசு ரத்த சேமிப்பு வங்கிகள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் சாத்தூர் சம்பவத்துக்கு பின்னர் இம்மாவட்டத்தில் உள்ள 4 ரத்த சேமிப்பு வங்கிகளிலும் 7 ரத்த இருப்பு மையங்களிலும் உள்ள இருப்புகள் மறுபரிசோதனை செய்யப்பட்டு அவற்றில் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு அன்று சிவகாசி, விருதுநகரில் நடைபெற்ற ரத்ததான முகாமின் போது சிவகாசியில் 52 யூனிட் ரத்தமும், விருதுநகரில் 121 யூனிட் ரத்தமும் பெறப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் அரசு ரத்த சேமிப்பு வங்கிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story