வேளாங்கண்ணி விடுதியில், சிறுமி பிணம் உடன் வந்த தாய், தங்கை உள்பட 3 பேர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை


வேளாங்கண்ணி விடுதியில், சிறுமி பிணம் உடன் வந்த தாய், தங்கை உள்பட 3 பேர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை
x
தினத்தந்தி 3 Jan 2019 11:15 PM GMT (Updated: 3 Jan 2019 6:37 PM GMT)

வேளாங்கண்ணி விடுதியில் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடன் வந்த தாய், தங்கை உள்பட 3 பேர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

வேளாங்கண்ணி,

வேலூர் கணியம்பாடி அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் தனது தம்பியின் மகள் ஜெயந்தி(வயது 40), ஜெயந்தியின் மகள்கள் மகாலட்சுமி(6), ஸ்ரீலட்சுமி(2) ஆகியோருடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் 4 பேரும் கடந்த 28-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை வேளாங்கண்ணியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம்(2-ந் தேதி) அறையை காலி செய்யுமாறு கூறுவதற்காக விடுதி பணியாளர்கள், கோபாலகிருஷ்ணன் உள்பட 4 பேரும் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

பூட்டப்பட்டிருந்த அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர்கள், ஜன்னல் வழியாக அறைக்குள் பார்த்தனர். அங்கு கட்டிலில் கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி ஆகியோருடன் வந்த சிறுமி மகாலட்சுமி இறந்து கிடந்தது தெரிய வந்தது. சிறுமியின் தாத்தா கோபாலகிருஷ்ணன், தாய் ஜெயந்தி, தங்கை ஸ்ரீலட்சுமி ஆகிய 3 பேரையும் காணவில்லை.

இதுகுறித்து வேளாங் கண்ணி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தகவலின் பேரில் வேளாங்கண்ணி போலீசார், அந்த விடுதிக்கு சென்று மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? அப்பாடியானால் அவரை கொலை செய்தவர்கள் யார்? ஜெயந்தி மற்றும் அவருடைய இளைய மகளுடன் கோபாலகிருஷ்ணன் மாயமானதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் வேளாங்கண்ணி பகுதியில் தலைமறைவாக உள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி, ஸ்ரீலட்சுமி ஆகிய 3 பேரும் ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்ற திடுக்கிடும் தகவல் வேளாங்கண்ணி போலீசாருக்கு கிடைத்தது.

வேளாங்கண்ணி விடுதியில் பிணமாக கிடந்த சிறுமி உள்பட 4 பேர் வேளாங் கண்ணிக்கு ஏன் வந்தனர்? தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் வந்தார்களா? சிறுமி மகாலட்சுமி எப்படி இறந்தார்? கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி, ஸ்ரீலட்சுமி ஆகியோர் ஆந்திராவில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விடுதியில் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சம்பவமும், அவருடன் வந்த 3 பேர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் வேளாங்கண்ணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story