பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 70 பேர் கைது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 70 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 11:00 PM GMT (Updated: 9 Jan 2019 7:25 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த சிக்கல் கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில குழு உறுப்பினருமான மாரிமுத்து தலைமை தாங்கினார். நாகை ஒன்றிய செயலாளர் பகு, நகர செயலாளர் பெரியசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

விவசாய விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவை விட 1½ மடங்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அன்னிய நேரடி முதலீட்டை கட்டுப்படுத்த வேண்டும். ரேஷன் பொருட்களை அனைவருக்கு வழங்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை முதலாளிக்கு ஆதரவாக திருத்த கூடாது. குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். 60 வயதான விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் விவசாய தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் ஜீவாராமன், மாவட்ட குழு உறுப்பினர் செந்தில்குமார், திருமருகல் ஒன்றிய செயலாளர் சிங்காரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர்-நாகை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல வேளாங் கண்ணி அருகே மேலப்பிடாகை கடைத்தெருவில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளருமான நாகை மாலி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story