சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 45 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 45 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 10:45 PM GMT (Updated: 9 Jan 2019 8:31 PM GMT)

ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நான்கு ரோடு சந்திப்பு வந்து, பின்னர் தபால் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

தனியார் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு விரோதமாகவும் செயல்படும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், நூறு நாள் வேலை, வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தியும், இல்லையென்றால் அதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை உரியவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஜெயங்கொண்டத்தில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று அந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நான்கு ரோடு சந்திப்பு வந்து, பின்னர் தபால் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் உத்திராபதி, ஒன்றிய செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story