ஆனைமலை ஒன்றிய பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து குடிநீர் வினியோகம் மாவட்ட ஊராட்சி செயலர் தகவல்


ஆனைமலை ஒன்றிய பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து குடிநீர் வினியோகம் மாவட்ட ஊராட்சி செயலர் தகவல்
x
தினத்தந்தி 12 Jan 2019 11:00 PM GMT (Updated: 12 Jan 2019 8:39 PM GMT)

ஆனைமலை ஒன்றிய பகுதியில் உள்ள கிராமமக்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனைசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஊராட்சி செயலர் தெரிவித்தார்.

ஆனைமலை,

ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளின் செயலர்களுக்கான ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி செயலர் பத்மாவதி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கிராமங்களில் மின்சாரம், குடிநீர் வினியோகம் உள்ளிட்டவை குறித்து கேட்டறியப்பட்டது. பின்னர் மாவட்ட ஊராட்சி செயலர் பத்மாவதி நிருபர்களிடம் கூறியதாவது:– ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் தெரு விளக்குகள் முறையாக எரிய வேண்டும், மின் கட்டணம் அதிகரிக்காமல் இருக்க தேவையற்ற இடங்களில் தெருவிளக்குகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும், தெரு விளக்குகள் பழுதடைந்தால் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனைமலை ஒன்றியத்தைப் பொறுத்தவரை ஆழியாறு அணை, பாலாறு மற்றும் கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் மூலம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. இருந்தபோதிலும் குழாய்களில் உடைப்பு, மின் தடை உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில இடங்களில் குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. அதனையும் தவிர்க்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சுத்திகரிப்பு செய்யப்பட்டு பாதுகாப்பான குடிநீரே கிராமமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் ஆண்டுக்கு ஒரு முறை குடிநீரை பரிசோதனை செய்து சுகாதாரமாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பைகளை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம்.அதேபோல் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் சிறு தவறுகள் கூட ஏற்படாமல் மிக கவனமாக செய்து முடிக்கும்படி செயலர்களிடம் கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஆனைமலை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியத்திற்குட்பட்ட 19 ஊராட்சிகளின் செயலர்களும் கலந்துகொண்டனர்.


Next Story