வில்லியனூர் அருகே சுடுகாட்டில் இரும்புக் குழாயால் அடித்து பைனான்சியர் கொலை நண்பர்கள் வெறிச்செயல்


வில்லியனூர் அருகே சுடுகாட்டில் இரும்புக் குழாயால் அடித்து பைனான்சியர் கொலை நண்பர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 18 Jan 2019 11:45 PM GMT (Updated: 18 Jan 2019 8:45 PM GMT)

புதுச்சேரி அருகே சுடுகாட்டில் பைனான் சியர் இரும்புக்குழாயால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்ததாக அவரது நண்பர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வில்லியனூர்,

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது அவருடைய மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்து நண்பர்கள் கூப்பிடுகிறார்கள், பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு வெளியில் சென்றார்.

அதன் பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே வில்லியனூரை அடுத்த கோட்டைமேடு சுடுகாட்டில் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. தலையில் இரும்புக் குழாயால் அடித்து அவரை கொலை செய்து இருந்தனர். உடல் அருகே செருப்புகள் சிதறிக் கிடந்தன.

இதுபற்றி தகவல் அறிந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்- இன்ஸ்பெக்டர் வேலய்யன், மற்றும் போலீசார் விரைந்து சென்று ராமலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராமலிங்கத்தின் நண்பர்கள் ராஜா, சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பைனான்சியர் ராமலிங்கத்துக்கும், ராஜாவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் பகல் ராமலிங்கம் தனது நண்பர்களுடன் சினிமா படம் பார்த்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்த ராமலிங்கத்தை மதுகுடிக்க வரும்படி அழைத்து, சுடுகாட்டில் வைத்து அவரை நண்பர்களே கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து ராமலிங்கத்தின் நண்பர்கள் ராஜா (31), சபரி, சக்திவேல் (29), நடராஜன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலை நடந்த 6 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

கொலையுண்ட ராமலிங்கத்துக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த படுகொலை சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story