உப்பிலியபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


உப்பிலியபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Jan 2019 10:45 PM GMT (Updated: 21 Jan 2019 8:53 PM GMT)

உப்பிலியபுரம் அருகே உள்ள வடக்குப்பட்டி கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் அருகே எரகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்குப்பட்டி கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலை யில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்தும், சீராக குடிநீர் வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் பொதுமக்கள் துறையூர்- புளியஞ்சோலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, மனோகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செழியன், ஒன்றிய பொறியாளர் பாலாஜி, மேற்பார்வையாளர் விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மணிவாசகம், ஊராட்சி செயலாளர் பழனியாண்டி ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

புதிய மின்மோட்டார்

இதில், நாளை மறுநாளுக்குள்(வியாழக்கிழமை) அப்பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறு மற்றும் கவுண்டம்பாளையம் ஆழ்குழாய் கிணற்றுக்கு புதிய மின்மோட்டார் அமைக்கப்படும். குழாயை சரிசெய்து அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story