தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய நெல்லை கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி


தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய நெல்லை கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 28 Jan 2019 11:15 PM GMT (Updated: 28 Jan 2019 7:29 PM GMT)

தூத்துக்குடியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென ஏறிய நெல்லை கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

தூத்துக்குடி,

நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணநாராயணன். இவரின் மகன் காளிராஜ் (வயது 21). இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி தளவாய்புரம் பகுதியில் உள்ள தனது உறவினர் மீனாட்சிசுந்தரம் வீட்டுக்கு இவர் வந்தார். மீனாட்சிசுந்தரம் தூத்துக்குடி கருத்தபாலம் பகுதியில் ஓட்டல் வைத்து உள்ளார்.

நேற்று காலையில் இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கருத்தபாலம் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தளவாய்புரத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை மீனாட்சிசுந்தரம் ஓட்டினார்.

மோட்டார் சைக்கிள் மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் சென்றபோது, காளிராஜ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்து, சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறினார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் மீனாட்சி சுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். அவர், காளிராஜின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவருடைய உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், காளிராஜ் எதற்காக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story