மீன், இறைச்சி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை


மீன், இறைச்சி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 10 Feb 2019 10:52 PM GMT (Updated: 10 Feb 2019 10:52 PM GMT)

மதுரையில் மீன், இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் தராசு, எடைகற்களை பறிமுதல் செய்தனர்.

மதுரை,

மதுரை தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் பாலச்சந்திரன், தொழிலாளர் துறை இணை ஆணையர் வேல்முருகன் ஆகியோரது உத்தரவின் பேரில் மதுரை தொழிலாளர் துறை உதவி ஆணையர் காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் போலீசாருடன் மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது மீன், இறைச்சி கடைகளில் பயன்படுத்தப்பட்ட எடையளவுகள் ஆய்வு செய்யப்பட்டன. கடைக்காரர்கள் பயன்படுத்தும் எடையளவுகள், மின்னணு தராசுகள் சோதனை எடைகற்கள் கொண்டு சரியான எடை காண்பிக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது எடையளவுகள், மின்னணு தராசுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபாரத்திற்கு பயன்படுத்தியதாக, 25 மின்னணு தராசுகள், 10 மேஜை தராசுகள், 96 இரும்பு எடைகற்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story