ஏம்பலம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு 8 பேரிடம் விசாரணை


ஏம்பலம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு 8 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 11 Feb 2019 11:45 PM GMT (Updated: 11 Feb 2019 11:30 PM GMT)

ஏம்பலம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அவருடைய தாய் காயமடைந்தார். இது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனூர்,

வில்லியனூரை அடுத்த ஏம்பலம் அருகே மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் சபரி. இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சபரி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.

இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வீட்டின் முன்பகுதியில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் ஓட்டை விழுந்து அதன் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த சபரி மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்து வெளியே வந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர்.

இதுபற்றி மங்கலம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. ரோந்து பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டின் மீது மர்ம நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளின் துகள்களை சேகரித்து, ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர்.

வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் சபரியின் தாய் ராஜேஸ்வரி காயமடைந்தார். அவர் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியல் போட்டி காரணமாக சபரி வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த 8 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் மணக்குப்பம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சபரியின் ஆதரவாளர்கள் நேற்று மாலை மணக்குப்பம்-புதுச்சேரி சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story