புயல் நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்


புயல் நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 12 Feb 2019 10:30 PM GMT (Updated: 12 Feb 2019 7:10 PM GMT)

புயல் நிவாரணம் வழங்கக்கோரி வாய்மேடு அருகே தாணிக்கோட்டகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளைசெயலாளர் வடுகையன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோவை.சுப்பிரமணியன், வெற்றியழகன், பன்னீர்செல்வம், இளையபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி கலந்துகொண்டு பேசினார். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் குலவாணன் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை, ஓட்டு, மாடி வீடுகளுக்கு அரசு அறிவித்த நிவாரணம் இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை. உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

பேச்சுவார்த்தை

தென்னை, மா, சவுக்கு, முந்திரி உள்ளிட்ட மரங்கள் பாதிப்பு குறித்து முறையாக கணக்கெடுக்கவில்லை. முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த துணை தாசில்தார் முருகு, வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story