“முஸ்லிம்கள்-தி.மு.க. இடையேயான நட்பு என்றும் நிலைத்து நிற்கும்” மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு


“முஸ்லிம்கள்-தி.மு.க. இடையேயான நட்பு என்றும் நிலைத்து நிற்கும்” மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 16 Feb 2019 11:45 PM GMT (Updated: 16 Feb 2019 10:46 PM GMT)

“முஸ்லிம்கள்-தி.மு.க. இடையேயான நட்பு என்றும் நிலைத்து நிற்கும்” என மதுரையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை,

மதுரையில் நேற்று நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் கருணாநிதி தவறாமல் கலந்து கொள்வார். அவரது வழியை பின்பற்றுவதால் நானும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன். தி.மு.க.-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே உள்ள கூட்டணி நல்லுறவால் ஏற்பட்டதாகும். எங்களது நட்பை யாராலும் பிரிக்க முடியாது. தேர்தல் வரும், போகும். வெற்றி வரும், போகும். ஆனால் முஸ்லிம்களுக்கும் தி.மு.க.விற்கும் இடையே உள்ள நட்பு என்றும் நிலைத்து நிற்கும்.

தேச பக்தர்கள் என சொல்லி திரிபவர்கள் இந்த நாட்டை பிரிக்க நினைக்கிறார்கள். ஆட்சியாளர்களால் இந்தியாவிற்கு ஆபத்து உள்ளது என நான் திருச்சியில் கூறினேன். அது போன்ற சம்பவங்கள்தான் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக மோடி செயல்படுகிறார்.

திடீரென 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது, ஜி.எஸ்.டி.யால் வரிகளை அதிகரித்தது, பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தியது போன்ற மக்களுக்கு எதிரான செயல்களையே மோடி அரசு செய்து வருகிறது. மதுரையில் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது, அடிக்கல் நாட்டு விழா அல்ல, அது அடிக்கல் நாடக விழா. ஏனென்றால் எய்ம்ஸ் அறிவித்தது கடந்த 2015-ம் ஆண்டில். ஆனால், அதற்கு அடிக்கல் நாட்டியது 2019-ம் ஆண்டில். அரசியல் ஆதாயத்திற்காகவே மோடி இதுபோன்ற செயல்களை செய்கிறார்.

விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ. 6 ஆயிரமும், மாநில அரசு ரூ.2 ஆயிரமும் அறிவித்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து கொண்டு இந்த அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. கடந்த காலங்களில், டெல்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணம், முழு நிர்வாண போராட்டம் நடத்தியபோது இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடாதது ஏன்?

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரப்போகிறது. பிரதமரை அறிவிக்கும் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலிக்கும். 21 தொகுதிகளுக்கும் இடைதேர்தல் வந்துதான் ஆக வேண்டும். அது போக ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கின் தீர்ப்பு மார்ச் முதல் வாரத்தில் வர உள்ளது. முதல்- அமைச்சரை மாற்ற வேண்டும் என கூறிய 18 பேரை நீக்கும் நிலைதான், முதல்- அமைச்சருக்கு எதிராக ஒட்டு போட்ட ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேர் நிலையும்.

எனவே அவர்களும் பதவி விலக வேண்டிய சூழல் வரும். அதன் மூலம் விரையில் இந்த இடைத்தேர்தல்களுடன் பொதுத்தேர்தலும் விரைவில் வரும். அடிபணிந்து செயல்படும் அ.தி.மு.க.விற்கும், மத்திய அரசிற்கும் முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஒரு அணியில் திரள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேசும் போது, ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் இதுவரை முஸ்லிம் தலைவர்கள், பெரியவர்கள் பெயரிலேயே விருதுகள் வழங்கி வந்தோம். ஆனால் அடுத்த ஆண்டு முதல் “செம்மொழி தமிழ் தலைவர் கலைஞர்” என்ற பெயரில் விருது வழங்கப்படும்” என்றார்.

Next Story