வேலையை விட்டு நீக்கியதால் கன்டெய்னர் லாரியை கடத்திய வாலிபர் கைது


வேலையை விட்டு நீக்கியதால் கன்டெய்னர் லாரியை கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2019 10:45 PM GMT (Updated: 26 Feb 2019 6:19 PM GMT)

திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலையை விட்டு உரிமையாளர் நீக்கியதால் ஆத்திரத்தில் லாரியை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் மஸ்தான் கோவில் பகுதியில் தனியார் லாரி நிறுவனம் உள்ளது. இதில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த தாவீது ராஜா (வயது 34) என்பவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் அடிக்கடி மது போதையில் லாரியை ஓட்டியதாக கூறி அவரை உரிமையாளர் வேலையை விட்டு நீக்கி விட்டார்.

இதனால் மனமுடைந்து, அப்பகுதியில் சுற்றித் திரிந்து வந்த தாவீது ராஜா நேற்று முன்தினம் இரவு மது போதையில் நிறுவனத்தின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை கடத்தி சென்றுவிட்டார். மணலி விரைவு சாலையில் லாரியை கடத்தி செல்வதை கண்ட அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் உடனே லாரி உரிமையாளர் லோகநாதன் என்பவருக்கு தகவல் கொடுத்தார்.

இதுகுறித்து அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில், மாதவரம் ரெட்டேரி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு வேகமாக சென்ற கன்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர். போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்து இறங்கி தாவீது ராஜா தப்பி ஓடி விட்டார். போலீசார் லாரியை மீட்டு, தப்பி ஓடிய தாவீது ராஜாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருவொற்றியூர் பகுதியில் சுற்றித்திரிந்த தாவீது ராஜாவை திருவொற்றியூர் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் பழிவாங்குவதற்காக லாரியை கடத்தி சென்றதாக தெரிவித்தார். இதுபற்றி திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தாவீது ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story