தையல் கடையில் தீ விபத்து; துணிகள் எரிந்து நாசம்


தையல் கடையில் தீ விபத்து; துணிகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 28 Feb 2019 10:45 PM GMT (Updated: 28 Feb 2019 8:50 PM GMT)

கரூரில்,தையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் துணிகள் எரிந்து நாசமாகின.

கரூர், 

கரூர் வெங்கமேடு தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம் அருகே சேலம் மெயின்ரோட்டில் தையல் கடை வைத்து நடத்தி வருபவர் விமல். நேற்று மாலை இவர், ஆர்டரின் பேரில் தைத்து வைத்த புது துணிகளை இஸ்திரி பெட்டி மூலம் “அயர்ன்” செய்து கொண்டிருந்தார்.

அப்போது வேலை நிமித்தமாக கடையை பூட்டி விட்டு விமல் வெளியே சென்று விட்டார். அப்போது இஸ்திரி பெட்டி “ஆப்” செய்யப்படாமல் அப்படியே வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் திடீரென இஸ்திரி பெட்டி வைக்கப்பட்டிருந்த துணி வெப்பத்தினால் கருகி தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அதில் இருந்து பரவிய தீயானது கடையில் இருந்த புது துணிகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட பொதுமக்கள், இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர்கள் விஜயகுமார், ராஜா (போக்குவரத்து) மற்றும் ரெங்கர், பெரியசாமி, சரவண

கணேஷ், இளங்கோ உள்பட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தையல் கடையின் ஷட்டரை உடைத்து திறந்தனர். அப்போது அங்கு எரிந்து கொண்டிருந்த துணிகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் துணிகள் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து வெங்கமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தையல் கடையில் தீப்பிடித்து எரிந்ததை அறிந்ததும், அந்த கடையில் துணி தைக்க கொடுத்திருந்தவர்கள் பலர் திரண்டு வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Next Story