வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி கேரள தம்பதி மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி கேரள தம்பதி மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
x
தினத்தந்தி 4 March 2019 10:15 PM GMT (Updated: 4 March 2019 8:08 PM GMT)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கேரள தம்பதி மீது இளைஞர்கள் சிலர் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர்.

திருச்சி,

புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் (வயது 27), கறம்பக்குடியை சேர்ந்த திருமணஞ்சேரி உள்பட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சில இளைஞர்கள் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:-

கேரள மாநிலத்தை சேர்ந்த சுமேஷ், அவரது மனைவி ஷப்னா ஆகியோர் திருச்சியில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

இந்த நிறுவனத்தில் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக பணம் செலுத்தியிருந்தோம். துபாயில் வேலை எனக்கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்களை அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சென்ற பின்பு தான் சுற்றுலா விசாவில் நாங்கள் சென்றிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து திரும்பி வந்த பின் நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் அவர்கள் திருப்பி தரவில்லை.

இதேபோல திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் பலர் லட்ச கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமேஷ் தம்பதி பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளனர். தற்போது அவர்கள் திருச்சி ராமலிங்கநகரில் வசித்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கண்ணன், திருமணஞ்சேரி ஆகியோர் தலா ரூ.2½ லட்சம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறினர். மனுவை பெற்ற போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story