நாட்டார்மங்கலம் மன்னார் ஈஸ்வரன் கோவில் தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


நாட்டார்மங்கலம் மன்னார் ஈஸ்வரன் கோவில் தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 4 March 2019 10:30 PM GMT (Updated: 4 March 2019 8:18 PM GMT)

நாட்டார்மங்கலம் மன்னார் ஈஸ்வரன் கோவிலில் நடைபெற்ற தேர்வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் உள்ள மன்னார் ஈஸ்வரன், ஸ்ரீ பச்சாயி அம்பாள் கோவிலுக்காக ரூ.8 லட்சத்து 5 ஆயிரம் செலவில் புதிய தேர் செய்யப்பட்டது. புதிய தேரின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் நேற்று தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வெள்ளோட்டம்

தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட தேரின் முன்பு தீர்த்த குடங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது பின்னர் புதிய தேரின் மீது தீர்த்த குடங்களை வைத்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குடிமக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story