அ.தி.மு.க. வேட்பாளர்களை யாராலும் விரட்ட முடியாது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி


அ.தி.மு.க. வேட்பாளர்களை யாராலும் விரட்ட முடியாது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 4 March 2019 11:00 PM GMT (Updated: 4 March 2019 8:58 PM GMT)

அ.தி.மு.க. வேட்பாளர்களை யாராலும் விரட்ட முடியாது என போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூர் பூலாம்பாளையம், மண்மங்கலம், கள்ளிப்பாளைம், காதப்பாறை உள்ளிட்ட இடங்களில் சாலை மேம்பாடு செய்தல், நாடகமேடை அமைத்தல், சமுதாயக்கூடம் அமைத்தல், குடிநீர் திட்ட பணிகள் என ரூ.11 கோடியே 77 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மேற்கண்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, புஞ்சை புகளூரில் தடுப்பணை, போக்குவரத்து வசதிக்காக குகைவழிப்பாதை, குடிநீர் மேம்பாட்டு பணிகள் என்பன உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

அந்த வகையில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் கரூர் மாவட்டத்தில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 3 மாதங்களாக அரவக்குறிச்சி தொகுதியின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.30 கோடி வரையில் சாலை வசதி, மின்விளக்குவசதி என்பன உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தலை முன்வைத்து இந்த பணிகளை செய்வதாக கூறுவது ஏற்புடையதல்ல. நாங்கள் நேரடியாக மக்களை சந்தித்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.

கரூரில் திட்டங்களை செயல்படுத்தாத அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஓட்டு கேட்க வந்தால் ஓட ஓட விரட்டுவோம் என மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கூறியிருக்கிறாரே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் கூறுகையில், உதிரம் உள்ளவரை ஜெயலலிதாவுக்கு தான் ஆதரவு என்றார் அவர். அந்த வகையில் தற்போது அவருக்கு உதிரம் இல்லையா?. எங்களை விரட்ட யாராலும் முடியாது. யார் வந்தாலும் நாங்கள் திருப்பி அடித்து பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தார்.

Next Story