துறைமுகம் அமைக்க எதிர்ப்பு கன்னியாகுமரியில் போராட்டம்


துறைமுகம் அமைக்க எதிர்ப்பு கன்னியாகுமரியில் போராட்டம்
x
தினத்தந்தி 5 March 2019 11:00 PM GMT (Updated: 5 March 2019 8:58 PM GMT)

கன்னியாகுமரியில் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த துறைமுகம் அமையும் பட்சத்தில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்ட மீன்தொழிலாளர் சங்கம் சார்பில் கன்னியாகுமரி ரவுண்டானாவில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணைதலைவர் தனிஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்பிடி தொழில் சங்க கூட்டமைப்பு தலைவர் வக்கீல் ஜெலஸ்டின் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

போராட்டத்தில், கன்னியாகுமரி சரக்கு பெட்டகமாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், மீன்துறை அமைச்சகத்தை சட்டப்பூர்வமாக நடைமுறை படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், எல்.ஐ.சி. ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி குழந்தைசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன், குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர், பொது செயலாளர் அந்தோணி, மாவட்ட செயலாளர்கள் அலெக்ஸ், ஜேம்ஸ், துறைமுக எதிர்ப்புகுழு ஒருங்கிணைப்பாளர் பிரபா, இணை ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் முருகேசன், வக்கீல் ராஜன் மற்றும் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Next Story