தமிழக காங்கிரஸ் தலைவர் இன்று குமரி வருகை ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்ட இடத்தை பார்வையிடுகிறார்


தமிழக காங்கிரஸ் தலைவர் இன்று குமரி வருகை ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்ட இடத்தை பார்வையிடுகிறார்
x
தினத்தந்தி 6 March 2019 10:45 PM GMT (Updated: 6 March 2019 9:31 PM GMT)

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று குமரி வருகிறார். அவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட இடத்தை பார்வையிடுகிறார்.

நாகர்கோவில்,

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி 13-ந் தேதி (புதன்கிழமை) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். அப்போது அவர், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அவர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பொதுக்கூட்டத்துக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானம், கன்கார்டியா பள்ளி மைதானம், பொன்ஜெஸ்லி கல்லூரி மைதானம், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் ஆகிய 4 இடங்களுக்கு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அனுமதி பெற்றுள்ளனர்.

ஆனாலும் எந்த இடத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தநிலையில் நேற்று குமரி மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பிரின்ஸ் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மேற்கண்ட 4 இடங்களையும் பார்வையிட்டனர்.

பின்னர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு 4 இடங்களை தேர்வு செய்து, அதற்கு அனுமதியும் பெற்றுள்ளோம். 4 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத், செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்.எல்.ஏ., மயூரா ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நாகர்கோவில் வருகிறார்கள். அவர்கள் 4 இடங்களையும் பார்வையிட்டு, பொதுக்கூட்டத்துக்கான இடத்தை தேர்வு செய்கிறார்கள்.

அதன்பிறகு காலை 11 மணிக்கு நாகர்கோவில் விஜயெதா மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர் என்றார்.

Next Story