மணல் கடத்தி வந்த லாரி மோதி தனியார் ஆலை ஊழியர் பலி நஷ்டஈடு வழங்க கோரி போலீஸ் நிலையம் முற்றுகை


மணல் கடத்தி வந்த லாரி மோதி தனியார் ஆலை ஊழியர் பலி நஷ்டஈடு வழங்க கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 6:50 PM GMT)

திருவெறும்பூர் அருகே மணல் கடத்தி வந்த லாரி மோதி தனியார் ஆலை ஊழியர் பலியானார். அவரது குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவெறும்பூர்,

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த பத்தாளப்பேட்டை ஊராட்சி கீழமாங்காவனத்தை சேர்ந்தவர் மணிவேல் (வயது 45). இவர் துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் ஆலையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி (40). தம்பதி இருவரும் நேற்று முன்தினம் துவாக்குடியில் இருந்து கீழமாங்காவனத்துக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

வாழவந்தான் கோட்டையை அடுத்த திருநெடுங்குளம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கிளியூர் காவிரிஆற்றில் இருந்து மணல் கடத்தி கொண்டு அதிவேகமாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த மணிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கூத்தைப்பார் அருகே உள்ள கச்சோந்திமலை கிராமத்தில் இதே கிளியூர் காவிரிஆற்றில் மணல் கடத்தி வந்த லாரி மோதியதில் கொத்தனார் ராஜேந்திரன் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் ஒருவர் பலியானது இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திருவெறும்பூர் பகுதியில் மணல் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மணல் கடத்தல் லாரி மோதி பலியான மணிவேல் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனையடுத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story