மீஞ்சூர் அருகே வீட்டில் போதைப்பொருள் தயாரித்தவர் கைது


மீஞ்சூர் அருகே வீட்டில் போதைப்பொருள் தயாரித்தவர் கைது
x
தினத்தந்தி 14 March 2019 9:45 PM GMT (Updated: 14 March 2019 5:14 PM GMT)

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு கிராமத்தில் வீட்டில் போதைப்பொருட்கள் தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போதைப்பொருள் தயாரிப்பதற்கான 10 கிலோ மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் சிலர் போதைப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பொன்னேரி துணை சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி தலைமையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் அத்திப்பட்டு பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு மர்மநபர்கள் அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அங்கிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அவரது பெயர் முருகேசன் (வயது 40) என்பதும், வெளியிடங்களில் இருந்து மூலப்பொருட்களை வாங்கி வந்து போதைப்பொருட்களை வீட்டில் தயாரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் வீட்டில் சோதனையிட்டதில் விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த போதைப்பொருட்கள் மற்றும் 10 கிலோ மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 ஆயிரத்துக்குமேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து முருகேசனை போலீசார் கைது செய்து போதைப்பொருட்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது?, குட்கா தயாரிக்கும் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Next Story