மனைவியை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த தொழிலாளி - விருத்தாசலத்தில் பரபரப்பு


மனைவியை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த தொழிலாளி - விருத்தாசலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 8:47 PM GMT)

மனைவியை கடித்த பாம்புடன் தொழிலாளி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள ராசாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி(வயது 42). இவருடைய மனைவி சந்தோஷ்(32). இவர்கள், இருவரும் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராசாபாளையம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று காலையில் கரும்பு வெட்டுவதற்காக எருமனூருக்கு சென்றனர். இவர்களுடன் வீராசாமி-சந்தோஷ் தம்பதியினரும் சென்றனர். அங்கு விவசாயி ஒருவரது தோட்டத்தில் கரும்புகளை வெட்டி, கட்டுக்கட்டாக கட்டினர். பின்னர் அந்த கரும்பு கட்டுகளை, சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைப்பதற்காக தொழிலாளர்கள் டிராக்டர் டிப்பரில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

சந்தோஷ், ஒரு கரும்பு கட்டை தூக்க முயன்றார். அப்போது அதில் இருந்த ஒரு பாம்பு, சந்தோஷின் இடது காலில் கடித்தது. அடுத்த சில நொடிகளில் அவர், மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீராசாமி, ஓடிவந்து தனது மனைவியை தூக்கினார்.

அந்த சமயத்தில் அந்த பாம்பு, அங்கிருந்து ஊர்ந்து சென்றது. உடனே வீராசாமி, அந்த பாம்பின் தலையை பிடித்தார். இதையடுத்து வீராசாமி, தனது மனைவியையும், அவரை கடித்த பாம்பையும் தூக்கிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம், வீராசாமி தான் கையில் வைத்திருந்த பாம்பை காட்டி, இதுதான் எனது மனைவியை கடித்ததாகவும், அதற்கான சிகிச்சையை உடனடியாக அளிக்குமாறும் கூறினார். அந்த சமயத்தில், அந்த பாம்பு வாலை சுருட்டியபடி நெளிந் தது. 4 அடி நீளமுள்ள அது, கட்டுவிரியன் பாம்பு என்று தெரியவந்தது. இதை பார்த்த அங்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்களும், அவர்களை அழைத்து வந்திருந்தவர்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். டாக்டர்களும், செவிலியர்களும் அந்த பாம்பை பார்த்து ஒரு நிமிடம் திகைத்துப்போனார்கள். உடனடியாக அந்த பாம்பை வெளியே கொண்டு செல்லுமாறு மருத்துவமனை ஊழியர்கள் வீராசாமியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து வீராசாமியுடன் வந்திருந்த தொழிலாளர்கள், அந்த பாம்பை வாங்கிக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர். அங்கு அந்த பாம்பை அவர்கள் அடித்துக்கொன்றனர். இதனிடையே சந்தோசுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இது குறித்து வீராசாமி கூறுகையில், எனது மனைவியை கடித்தது எந்த வகையான பாம்பு என்று எனக்கு தெரியவில்லை. எனவே அந்த பாம்பை கொண்டு வந்து டாக்டர்களிடம் காண்பித்தால், அது எந்த வகையான பாம்பு என்று தெரிந்து விடும். அதற்காகத்தான் அந்த பாம்பை பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தேன். அந்த பாம்பை பார்த்ததும் அவர்கள், கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு என்று கூறினர். அதனை தொடர்ந்து எனது மனைவிக்கு சிகிச்சை அளித்தனர் என்றார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story