உணவில் விஷம் கலந்து கொடுத்தார், மகனைக் கொன்று, தாய் தற்கொலை


உணவில் விஷம் கலந்து கொடுத்தார், மகனைக் கொன்று, தாய் தற்கொலை
x
தினத்தந்தி 15 March 2019 11:04 PM GMT (Updated: 15 March 2019 11:04 PM GMT)

வீராம்பட்டினத்தில் மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம், 

வீராம்பட்டினம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஞானவேலு, மீனவர். இவருடைய மனைவி சீதாலட்சுமி (வயது 33), இவர்களுக்கு 3 மகன்கள். இவர்களில் மூத்தமகன் லோகேஷ் (வயது 15), மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் ஞானவேலுவுக்கும், அவருடைய உறவினருக்கும் சொத்து பிரச்சினையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அதேபோல் தகராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக சீதாலட்சுமி மனவேதனை அடைந்தார். இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

தான் இறந்துவிட்டால் மனநலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று அவர் கருதினார். அதனால் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்து உணவில் எலிமருந்தை (விஷம்) கலந்து கொடுத்துவிட்டு மீதம் இருந்த எலிமருந்தை சீதாலட்சுமி குடித்துவிட்டார்.

இதில் மயங்கிக் கிடந்த மனைவி மற்றும் மகனை ஞானவேலு மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் தாய்-மகன் இருவரும் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாகச் செத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story