பரங்கிப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி


பரங்கிப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 20 March 2019 11:00 PM GMT (Updated: 20 March 2019 9:05 PM GMT)

பரங்கிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் அஷ்ரப் அலி(வயது 18). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார்(19) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அஷ்ரப் அலி ஓட்டினார். பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த கார் அஷ்ரப்அலி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் அஷ்ரப் அலி, அருண்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் இருவரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அஷ்ரப் அலி பரிதாபமாக உயிரிழந்தார். அருண்குமாருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story