தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதிவு கலெக்டர் உமா மகேஸ்வரி பேட்டி


தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதிவு கலெக்டர் உமா மகேஸ்வரி பேட்டி
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 8:11 PM GMT)

தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட இணைய வழி கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உடனிருந்தனர்.

தொடர்ந்து கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இதற்கென ஏற்கனவே 48 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்வது குறித்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் இதுவரை ரூ.18 லட்சத்து 95 ஆயிரத்து 800 கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு பண பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தேர்தல் தொடர்பாகவும் மற்றும் புகார்கள் தெரிவிக்கவும் 3 வகையான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை ஆயிரத்து 303 பேர் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக பல்வேறு தகவல்களை கேட்டு பயன்பெற்று உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 12 லட்சத்து 56 ஆயிரத்து 262 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் தலா 50 சதவீதம் ஆவர். கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம்களின் மூலம் 20 ஆயிரத்து 285 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 479 பேர் 18 வயது பூர்த்தியடைந்த முதல் வாக்காளர்கள் ஆவர்.

ஆயிரத்து 400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்து 538 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு ஆயிரத்து 923 கட்டுப்பாட்டு கருவிகளும், 3 ஆயிரத்து 737 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஆயிரத்து 999 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகளும் இன்று (நேற்று) ஒதுக்கீடு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதில் கூடுதலாக கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்குப்பதிவு எந்திரம் 25 சதவீதமும், வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி 30 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நாளை (திங்கட்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 436 அரசு அலுவலர்கள் வாக்குப்பதிவு போன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story