பவானி அருகே பெண்கள் தாக்கியதால் அவமானம் தாங்காமல் தொழிலாளி தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்


பவானி அருகே பெண்கள் தாக்கியதால் அவமானம் தாங்காமல் தொழிலாளி தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 March 2019 11:45 PM GMT (Updated: 25 March 2019 6:58 PM GMT)

பவானி அருகே பெண்கள் தாக்கியதால் அவமானம் தாங்காமல் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. அவருடைய மனைவி பானுமதி. இவர்களுடைய மகன் சக்திவேல் (வயது 28). சாயப்பட்டறை தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஜோதிகா (22) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிகா கணவர் சக்திவேலை பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் சக்திவேல் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பானுமதி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெற மருத்துவ செலவுக்காக கடந்த ஆண்டு மகளிர் சுயஉதவிக்குழுவில் சேர்ந்து பானுமதி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கடனை அவரால் செலுத்த முடியவில்லை.

இதைத்தொடர்ந்து சக்திவேல் மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் மீதி பணத்தை தான் செலுத்துவதாக கூறி வந்துள்ளார். ஆனால் அவரால் கடனை கொடுக்க முடியவில்லை. நேற்று முன்தினம் மாலை மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள அதே பகுதியை சேர்ந்த பெலிப்சின் மனைவி திலகவதி (29), அம்பிகா (33), பவானி கவுண்டர் நகர் பகுதியை சேர்ந்த கனகா (32) ஆகிய 3 பேர் சக்திவேல் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அவர்கள் சக்திவேலிடம், உங்கள் தாய் கொடுக்க வேண்டிய கடனை திருப்பி தாருங்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஒரு பெண்ணின் ஆடை கிழிந்தது.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பெண்கள் அங்கு கிடந்த கட்டையை எடுத்து சக்திவேலை தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அலறியபடி கீழே விழுந்தார். பின்னர் 3 பெண்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று, சக்திவேலுக்கு தண்ணீர் கொடுத்து முதல்–உதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் பெண்கள் தாக்கியதால் சக்திவேல் மனம் உடைந்தார். இதனால் அவமானம் தாங்காமல் உடனே சாயப்பட்டறைக்கு ஓடிச்சென்று சாய கலவைக்கு வைக்கப்பட்டிருந்த மருந்தை எடுத்து குடித்தார்.

இதில் மயங்கிய அவரை பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று முன்தினம் மாலை இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரது உடலை வாகனத்தில் எடுத்துக்கொண்டு காடையாம்பட்டிக்கு உறவினர்கள் திரும்பி கொண்டிருந்தனர். காடையாம்பட்டி ரோட்டில் நேற்று மதியம் 3.45 மணி அளவில் சென்றபோது திடீரென உறவினர்கள் வாகனத்தை விட்டு கீழே இறங்கினார்கள். இதனைத்தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்களும் அங்கு திரண்டனர்.

சக்திவேல் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமான 3 பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதற்கு போலீசார் கூறும்போது, ‘சம்பந்தப்பட்ட 3 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் காடையாம்பட்டி ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதன்பின்னர் போலீசார் விசாரணை நடத்தி அந்த 3 பெண்களையும் கைது செய்தனர்.


Next Story