மீன்சுருட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5¾ பவுன் நகை திருட்டு


மீன்சுருட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5¾ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 11 April 2019 11:00 PM GMT (Updated: 11 April 2019 8:08 PM GMT)

மீன்சுருட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5¾ பவுன் நகைகளை திருடி விட்டு கண்காணிப்பு கேமராவுக்கு மாட்டுச்சாணத்தை பூசிசென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 40). இவர் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் தனது மனைவியுடன் கடலூர் மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் நடந்த உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5¾ பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மேலும் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவின் மீது மாட்டுச் சாணத்தை பூசிவிட்டு, அதில் பதிவான காட்சிகளின் மெமரி கார்டையும் மர்மநபர்கள் எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து பாலமுருகன் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நகர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story