பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மீன்சுருட்டி, ஆண்டிமடத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு


பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மீன்சுருட்டி, ஆண்டிமடத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 16 April 2019 11:00 PM GMT (Updated: 16 April 2019 8:29 PM GMT)

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மீன்சுருட்டி, ஆண்டி மடத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

மீன்சுருட்டி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி அனை வரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போலீசார் கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும், விழிப்புணர்வு ஊர்வலங்களையும் நடத்தியும் வந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 290 வாக்குச் சாவடி மையங்களில் 35 மையங்கள் பதற்றமானவை என்றும், அதில் நெருக்கடியான மையம் 2 எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதை வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடுவெட்டி, மேலணிக்குழி, மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு ஆகிய பகுதிகளில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் மத்திய ராணுவ படையினர், மீன் சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வக்குமார், மனோஜ் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆண்டிமடம் பகுதி பொதுமக்கள் அச்சமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கொடி அணி வகுப்பு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பு ஆண்டிமடம் பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆண்டிமடம் போலீஸ் நிலையம் வந்தடைந்தது. இந்த அணிவகுப்பில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகஸ்பதி, சற்குனம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story