சத்தியமங்கலம் அருகே பரபரப்பு; இலவச பொருட்களுடன் மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி நடந்தது


சத்தியமங்கலம் அருகே பரபரப்பு; இலவச பொருட்களுடன் மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி நடந்தது
x
தினத்தந்தி 16 April 2019 11:00 PM GMT (Updated: 16 April 2019 8:59 PM GMT)

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி சத்தியமங்கலம் அருகே இலவச பொருட்களுடன் மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே மலைப்பகுதியில் உள்ள கிராமம் மல்லியம்மன் துர்க்கம். கடம்பூர் மலையின் அடர்ந்த வனப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் இந்த கிராமம் அமைந்து உள்ளது. கடம்பூரில் இருந்து 3 மலைகளை கடந்து 9 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் இந்த கிராமத்தை அடையலாம். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் 100–க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். மொத்தம் 435 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மல்லியம்மன் துர்க்கத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் ஒன்று திரண்டு அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட இலவச பொருட்களை எடுத்துக்கொண்டு அங்குள்ள நடுநிலைப்பள்ளிக்கு சென்றனர். பின்னர் பள்ளி வளாகத்தில் உட்கார்ந்து அனைவரும் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கிராமத்தில் பெரும்பாலும் குடிசை வீடுகளே உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ளவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது. இங்குள்ளவர்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. மானவாரி பயிராக ராகி, சோளம், தினை போன்றவை பயிரிடப்படுகின்றன. மேலும் கொய்யா, பலா போன்ற மரங்களும் உள்ளன. எனவே இங்குள்ளவர்கள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை தலையில் சுமந்தபடி 9 கிலோ மீட்டர் நடந்து சென்று அருகில் உள்ள கடம்பூருக்கு சென்று விற்று வீட்டுக்கு தேவையானவற்றை வாங்கி வருகிறார்கள். மேலும் இங்குள்ளவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ? பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டாலோ? அவர்களை தொட்டில் கட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்லும் அவல நிலைதான் உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு மின் வசதி கிடையாது.

சாலை, மருத்துவம், மின்சாரம், பஸ் வசதி உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். 21–ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு கிராமம் உள்ளதா? அதிலும் மக்கள் வசிக்கிறார்களா? என வியந்து பார்க்கும் அளவுக்கு எங்கள் கிராமம் பரிதாப நிலையில் உள்ளது.

எங்கள் பகுதிக்கு மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 1972–ம் ஆண்டு கொண்டையம்பாளையம் பகுதியில் இருந்து மல்லியம்மன்துர்க்கத்துக்கு வனப்பகுதி வழியாக மின் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இதற்காக மரத்தாலான மின்கம்பங்கள் நடப்பட்டு 3 மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. மின் வசதி ஏற்படுத்தப்பட்ட ஓராண்டுக்குள் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மின் கம்பங்கள் எரிந்து சாம்பலானது. இதனால் மின் வசதி எங்களுக்கு வாய்க்கு எட்டியும், கைக்கு எட்டாத நிலையாக மாறியது.

எனவே அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி, மின் விசிறி, கிரைண்டர், மிக்சி போன்ற பொருட்களை பயன்படுத்த முடியாமல் உள்ளோம். எங்கள் கிராமத்துக்கு சாலை உள்பட அடிப்படை வசதி செய்து கொடுத்தால் தான் ஓட்டுப்போடுவோம். இல்லையென்றால் நாங்கள் ஓட்டுப்போடமாட்டோம். தேர்தலை புறக்கணிக்க போகிறோம் என கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் மலைவாழ் கிராமத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தேர்தல் புறக்கணிப்பு குறித்த துண்டு பிரசுரம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களிலும், சத்தியமங்கலம் நகரத்திலும் வினியோகம் செய்யப்பட்டது.

இதற்கிடையே சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி விஜய்சங்கர், சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக், வட்டார வளர்ச்சி அதிகாரி அப்துல்வகாம் மேலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் மல்லியம்மன்துர்க்கம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி உள்பட சிலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை முடிவில் தேர்தலை புறக்கணிக்கப்போவதில்லை என அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.


Next Story