தொழிலாளியின் இறுதி சடங்கில் பங்கேற்க மனைவிக்கு அனுமதி மறுப்பு உறவினர்கள் சாலை மறியல்


தொழிலாளியின் இறுதி சடங்கில் பங்கேற்க மனைவிக்கு அனுமதி மறுப்பு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 April 2019 10:15 PM GMT (Updated: 22 April 2019 6:55 PM GMT)

தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் இறுதி சடங்கில் பங்கேற்க மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் துவரங்குறிச்சி தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(வயது 40). சமையல் தொழிலாளி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று முத்துலட்சுமி தனது அண்ணன் வீட்டு விசேஷத்துக்காக மகள்களுடன் புறப்பட்டார்.

அப்போது ஜெய்சங்கரையும் உடன் வருமாறு முத்துலட்சுமி அழைத்தார். அதற்கு ஜெய்சங்கர் பின்னர் வருவதாக கூறி மனைவி, மகள்களை அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் இருந்தார்.

இதைத்தொடர்ந்து முத்துலட்சுமி அண்ணன் வீட்டுக்கு சென்று விசேஷத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில் வெகு நேரமாகியும் ஜெய்சங்கர் விசேஷத்தில் கலந்து கொள்ள வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த முத்துலட்சுமி வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஜெய்சங்கர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து முத்துலட்சுமி கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெய்சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடன் தொல்லை காரணமாக ஜெய்சங்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜெய்சங்கரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று ஜெய்சங்கரின் இறுதி சடங்குகள் கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள அவருடைய தந்தை வீட்டில் நடந்தது. இதில் முத்துலட்சுமி பங்கேற்பதற்கு ஜெய்சங்கரின் தந்தை மற்றும் உறவினர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் முத்துலட்சுமியின் உறவினர்களுக்கும், ஜெய்சங்கரின் தந்தை மற்றும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த முத்துலட்சுமியின் உறவினர்கள் ஜெய்சங்கரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்காமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டு, ஜெய்சங்கரின் உடல் சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story