ஈரோடு– பாலக்காடு பயணிகள் ரெயிலை நிறுத்தினால் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை


ஈரோடு– பாலக்காடு பயணிகள் ரெயிலை நிறுத்தினால் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 April 2019 10:30 PM GMT (Updated: 23 April 2019 6:43 PM GMT)

ஈரோடு–பாலக்காடு பயணிகள் ரெயிலை நிறுத்தினால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு,

முன்னாள் தென்னக ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினரும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை துணைத்தலைவருமான கே.என்.பாட்ஷா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை இயங்கி வந்த ரெயில் (வண்டி எண் 66609) கடந்த 1–ந்தேதி முதல் ரெயில்வே நிர்வாகம் நிறுத்தி விட்டது. இதேபோல் மறுமார்க்கமாக பாலக்காட்டில் இருந்து ஈரோடு வரை இயக்கி வந்த ரெயில் (வண்டி எண் 66608) சேவையையும் நிறுத்தி விட்டார்கள். கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த பயணிகள் ரெயிலை நிறுத்த வேண்டிய காரணம் என்ன? இது ஈரோடு, திருப்பூர், கோவை மக்களுக்கு ரெயில்வே நிர்வாகம் செய்யும் பெரிய துரோகம் ஆகும்.

இந்த ரெயில் சேவையினால் ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் பயணிகளுக்கும், 26 கல்லூரிகள், 6 பல்கலை கழகங்களுக்கு செல்லும் மாணவ –மாணவிகளுக்கும், மருத்துவமனை செல்லும் நோயாளிகளுக்கும் மிகவும் வசதியாக இருந்தது. மேலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும் பயன் உள்ளதாக இருந்தது.

ரெயில்வே நிர்வாகத்திற்கும் அதிகப்படியான வருவாய் கிடைத்தது. அப்படி இருக்கும் சமயத்தில் இந்த ரெயில் சேவையை நிறுத்திவிட்டார்கள். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு சேலம் ரெயில்வே நிர்வாகம் கடந்த 10–ந் தேதி முதல் வருகிற 27–ந் தேதி வரை சிறப்பு பயணிகள் ரெயில் ஈரோட்டில் இருந்து கோவை வரை இயக்க அறிவித்து உள்ளார்கள்.

இதற்கு பிறகு பயணிகள் என்ன செய்வார்கள்? ஆகவே இந்த ரெயில் சேவையை தொடர்ந்து இயக்க வேண்டும். கோவையில் இருந்து பாலக்காடு வரை இயக்கும்போது பயணிகள் கூட்டம் இல்லை, வருவாய் இழப்பு என்று கூறுகிறார்கள். ஆகவே இந்த ரெயிலை சேலத்தில் இருந்து காலை 6 மணிக்கு இயக்கி ஈரோடு, திருப்பூர், கோவை வரை நீட்டிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.

ரெயில்வே நிர்வாகம் பயணிகளை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டால் ரெயில் பயணிகளையும், பொது மக்களையும் ஒன்று திரட்டி ஈரோடு ரெயில் நிலையம் எதிரில் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் மே மாதம் முதல் வாரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.


Next Story