விசைப்படகு மராமத்து பணிகளுக்கு நிதி உதவி கிடைக்குமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு


விசைப்படகு மராமத்து பணிகளுக்கு நிதி உதவி கிடைக்குமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 15 May 2019 10:45 PM GMT (Updated: 15 May 2019 9:58 PM GMT)

விசைப்படகு மராமத்து பணிகளுக்கு நிதி உதவி கிடைக்குமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சேதுபாவாசத்திரம்,

தமிழகத்தில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கஜா புயலால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விசைப்படகுகள் சேதம் அடைந்தன. இதனால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. ஒரு சில மீனவர்கள் மட்டுமே கஜா புயலுக்கு பின்னர் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகிறார்கள்.

நிவாரணம் கிடைக்கவில்லை

புயலில் பகுதி அளவு சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.3 லட்சமும், முழுமையாக சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.5 லட்சமும் அரசு நிவாரணம் வழங்கியது. மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான படகுகளுக்கு இதுவரை புயல் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. புயலுக்கு பின்னர் கடலுக்கு சென்று வந்த ஒரு சில விசைப்படகு மீனவர்களும், தடை காலம் அமலில் இருப்பதால் தற்போது கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தடை காலத்தையொட்டி மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளை மராமத்து செய்து வருகிறார்கள். புயலால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிப்படைந்து இருப்பதால் விசைப்படகு மராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு அரசிடம் இருந்து நிதி உதவி கிடைக்குமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மராமத்து செலவு

இதுகுறித்து தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:- மீன்பிடி தடை காலத்தில் ஒரே இடத்தில் பல நாட்கள் படகுகளை நிறுத்தி வைத்திருப்போம். இதனால் படகுகளில் மராமத்து பணிகளை முழுமையாக செய்ய வேண்டியது அவசியம். சாதாரணமாக ஒரு விசைப்படகை கரையில் ஏற்றி சுத்தம் செய்து வர்ணம் பூசி கடலுக்குள் எடுத்து செல்வதற்கு மட்டும் குறைந்த பட்சம் ரூ.4 லட்சம் செலவாகும்.

கஜா புயலில் சேதம் அடைந்து அரைகுறையாக வேலை பார்த்து கடலுக்கு சென்று வந்த படகுகளை எல்லாம் தற்போது முழுமையாக மராமத்து செய்து வருகிறோம்.

நிதி உதவி

புதிய படகின் விலை ரூ.20 முதல் ரூ.40 லட்சம் வரை உள்ளது. மராமத்து பணிக்கு தேவையான பலகைகள் வாங்கவும், ஆசாரிகளுக்கு சம்பளம் வழங்கவும் கூடுதல் செலவாகிறது. படகுகளை முழுமையாக மராமத்து செய்வதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை தேவைப்படுகிறது.

நலிவடைந்து வரும் மீன்பிடி தொழிலை பாதுகாக்க விசைப்படகு மராமத்து பணிகளுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story